வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிரான பதாதைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் போனோரின் உறவுகள்!!

312

காணாமல் போனோரின் உறவுகள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வவுனியா விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று(14.08.2019) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் ஒன்றை திறந்து வைப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் வவுனியாவிற்கு வருகை தந்திருந்த நிலையில் அவரின் வவுனியா விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் மற்றும் தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான பதாதைகளுடனும் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் இன்று 14.08.2019 (புதன்கிழமை) அவர்கள் வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஏ9 வீதிக்கருகில் அமைந்துள்ள இடத்தில் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சம்பந்தனும் சுமந்திரனும் தமிழர் வாக்குகளை வைத்து தொடர்ந்தும் அரசியல் விபச்சாரம் செய்கின்றனர், சுமந்திரனே ரணிலுக்கு நக்கியது போதும் நீ வாக்குறுதியளித்தபடி உடனடியாக ராஜினாமா செய், எனது ராஜினாமா தமிழர் அரசியல் தீர்வு போன்றதா?,

எங்களுக்கு தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் தேவை சஜித் அல்லது கோத்தாவுக்கு வாக்களிப்பதால் பயன் இல்லை போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பாதாதைகளை ஏந்தியிருந்ததுடன் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் கைகளில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க போராட்டம் இடம்பெறும் வீதியூடாக வருகைதருவார் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். எனினும் பிரதமர் மாற்று வீதியினூடாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் கட்டிட திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார்.

இதனால் ஏமாற்றமடைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்ட இடத்திலிருந்து பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் பேரணியாக ஏ9 வீதியூடாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையினை நோக்கி சென்றனர்.

இதன் போது பிரதமரின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் வவுனியா மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக கலகம் தடுக்கும் பொலிஸார் , விசேட அதிரடிப்படையினர் ,பொலிஸார் குவிக்கப்பட்டு ஏ9 வீதியினை பொலிஸாரின் பேரூந்தினால் மறித்து பாதுகாப்பினை பலப்படுத்தியிருந்தனர்.

பிரதமரை தாம் சந்திக்க வேண்டுமென பேரணியான வந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலதடவைகள் பொலிஸாரிடம் தெரிவித்திருந்த போதிலும் பொலிஸார் முன்நோக்கி செல்ல அனுமதி வழங்கவில்லை.

அவ்விடத்திடத்திற்கு வருகை தந்திருந்த பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் பிரதமர் மீண்டும் செல்லும் போது போராட்டம் இடம்பெறும் பாதையூடாகவே பயணிப்பார் என வாக்குறுதியளித்தார். எனினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விடத்திலிருந்து அகன்று செல்லவில்லை.

அதன் பின்னர் இங்கு நின்று பலனில்லை என கருதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீண்டும் அவ் வீதியூடாக 907வது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருக்கும் இடத்தினை சென்றனர்.

தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி, போராட்டம் இடம்பெறும் இடம் , ஏ9 வீதி போன்றவற்றிக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.