நோயாளிகள் அவதி
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடுதழுவிய 24 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தினை இன்று (வியாழக்கிழமை) காலை 8மணி முதல் ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் வவுனியாவிலும் மருத்துவ அதிகாரிகள் இவ் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் உயிர்காப்பு நடவடிக்கை மட்டும் இயங்குவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் நோயாளிகள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதனையும் தூர இடத்திலிருந்து பெரும் சிரமத்திற்கு மத்தியில் வந்த நோயாளர்கள் அசௌகரியங்களுக்குள்ளாகி வருவதனையும் அவதானிக்க முடிகிறது.
இந்த வேலைநிறுத்தத்திற்கு பின்னரும் தகுந்த தீர்வு எட்டப்படவில்லை எனின் அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.
சுகாதாரத் துறையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரி தொடர்ந்தும் 2 வாரங்கள் வரையில் இந்த சங்கம் அரசாங்கத்திற்கு கால அவகாசம் அளித்திருந்தது. இருப்பினும் அவர்களுடைய கோரிக்கைக்கு அரசாங்கம் கவனம் செலுத்தாத பட்சத்திலேயே இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இருப்பினும் உரிய தரப்பினருடனான கலந்துரையாடல்களின் போது மக்களுக்கு நன்மைபயக்கும் வகையிலான தீர்மானங்கள் எட்டப்படும் பட்சத்தில் வேலை நிறுத்தத்தை தவிர்க்கமுடியும் எனவும் அறிவித்திருந்தனர்.
இன்றைய வேலை நிறுத்தத்தின் பின்னரும் தமது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.