குழந்தையை காருக்குள் வைத்து பூட்டி விட்டு சூதாடச் சென்ற தாய் கைது!!

594

CARஅமெரிக்காவின் பாட்லிமோர் நகரை சேர்ந்த ஒரு பெண் சூதாட்ட மோகத்தால் தனது 4 வயது குழந்தையை 8 மணி நேரத்துக்கு மேல் பூட்டிய காருக்குள் தன்னந்தனியாக தவிக்க விட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் மிகவும் பிரபலமான சூதாட்ட விடுதி ஒன்று உள்ளது. புத்தாண்டு தினத்தன்று மாலை சுமார் 7 மணியளவில் அந்த வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்கள் எல்லாம் பாதுகாப்பாக உள்ளனவா, என இந்த விடுதியின் காவல்காரர் பரிசோதித்துக் கொண்டு வந்தார்.

அப்போது நான்காவது தளத்தில் நின்றிருந்த ஒரு காருக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனையடுத்து சூதாட்ட விடுதியின் முகாமையாளருக்கு அவர் தகவல் அளித்தார். விரைந்து வந்த ஊழியர்கள், மாற்றுச்சாவியின் மூலம் காரின் கதவை திறந்து குழந்தையை வெளியே எடுத்தனர்.

கொட்டும் உறை பனியின் குளிர் மற்றும் பசி ஆகியவற்றை தாக்கு பிடிக்க முடியாமல் காற்றோட்டம் இல்லாத பூட்டிய காருக்குள், இருட்டில் கிடந்த குழந்தை பல மணி நேரமாக அழுதழுது சோர்வடைந்து களைப்புடன் காணப்பட்டதால் உடனடியாக அம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

குழந்தையை ஏற்றிக்கொண்டு அம்புலன்ஸ் புறப்பட்ட போது சூதாட கொண்டு சென்ற பணத்தை எல்லாம் தோற்று, பறிகொடுத்து விட்டு பார்க்கிங் பகுதிக்கு வந்த ஒரு பெண் தனது காருக்குள் விட்டு சென்ற குழந்தையை காணாமல் திடுக்கிட்டார்.

அங்கிருந்த காவலாளியிடம் விசாரித்த போது நடந்த சம்பவத்தை அவர் விளக்கி கூறினார். இதற்கிடையில், அங்கு வந்து சேர்ந்த பொலிசார், குழந்தை விடுவிக்கப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னதாக குறிப்பிட்ட அந்த காரை ஓட்டி வந்த ஒரு பெண், நான்காவது தளத்தில் காரை நிறுத்தி பூட்டிவிட்டு, கைப்பையுடன் சூதாட்ட விடுதிக்குள் சென்றதை சி.சி.டி.வி. பதிவுகளின் மூலம் கண்டு பிடித்தனர்.

குழந்தையை தேடிவந்த அந்த பெண், பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்த பொலிசார், அஜாக்கிரத்தையால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க முயன்ற குற்றத்திற்காக அலிசியா டெனிஸ் பிரவுன் (24) என்ற அந்த பெண்ணின் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

வைத்தியசாலையில் முதலுதவி சிகிச்சை மற்றும் உணவு அளிக்கப்பட்ட அந்த குழந்தை தற்போது மேரிலேண்ட்டில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்த பெண்ணின் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி 50 ஆயிரம் டொலர் சொந்த பிணையில் அவரை விடுதலை செய்துள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.