பெருமை சேர்த்த தமிழ் மகாவித்தியாலய மாணவர்கள்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ்த்தினப் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் முதலாம் இடத்தினை பெற்று வவுனியா மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ்த்தினப் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்களினால் அரங்கேற்றப்பட்ட நாட்டார் பாடல் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.

தேசியமட்டப் போட்டியில் மாணவர்கள் முதலாவது இடத்தினை பெறுவதற்கு மாணவர்களை நெறிபடுத்திய ஆசிரியை திருமதி நந்தினி சபாநாதன் அவர்களுக்கும் குறித்த மாணவர்களுக்கும் பாடசாலை சமூகமும் வவுனியா வாழ் மக்களும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

நாட்டார் பாடல் போட்டியில் முதலாவது இடத்தினை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயமும் , இரண்டாவது இடத்தினை ஹோலிரோசரி த.ம.வித்தியாலயமும் மூன்றாவது இடத்தினை மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயமும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




