வவுனியாவில் வலயக்கல்வி அலுவலகத்தினை முற்றுகையிட்ட பெற்றோர்கள்!!

268


வவுனியாவில்..



தமது பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளிற்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்து வவுனியா மகாகச்சகொடிய, மருதமடு, அலகல்லை போன்ற பகுதிகளில் வசிக்கும் பெற்றோர்கள் வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்தினை முற்றுகையிட்டிருந்தனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருந்தது. இதன்போது கருத்து தெரிவித்த பெற்றோர்கள்..



“தமது பிள்ளைகள் கற்கும் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாகுறை நீண்ட காலமாக நிலவி வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி தரம் வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்படுகின்றது.




ஆசிரியர் நியமனங்களின் போது அனைத்து வசதிகளும் காணப்படுகின்ற தேசிய பாடசாலைகளிற்கே முக்கியத்துவம் அளிக்கபடுகின்றது. அப்படியாயின் எமது பிள்ளைகள் எந்தவகையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.


நாம் வீதி கேட்கவில்லை, வீடு கேட்கவில்லை, ஆனால் எமது பிள்ளைகளுக்கு பெறுமதியான கல்வி வேண்டும். அதனையே கேட்கிறோம். எனவே மிக விரைவாக எமது பாடசாலைகளிற்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அத்துடன், வவுனியா மாவட்டத்திலிருந்து தேசிய கல்வியற்கல்லூரிகளிற்கு தெரிவு செய்யபட்டு வெளியேறும் சிங்கள ஆசிரியர்களை வவுனியாவில் அமைந்துள்ள சிங்கள பாடசாலைகளிற்கே நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.


இது தொடர்பாக வவுனியா வலயக்கல்வி அதிகாரி மு.இராதாகிருஸ்ணனிடம் கலந்துரையாடிய அவர்கள் மழையையும் பொருட்படுத்தாது வலயகல்வி பணிமனை முன்பாக நீண்ட நேரம் குழுமியிருந்தனர்.

இது தொடர்பாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணனிடம் வினவியபோது, “அவர்களது கோரிக்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வி திணைக்களத்திற்கு தெரியப்படுத்தவுள்ளேன்.

அத்துடன் மிகவிரைவில் தற்காலிகமாக அவர்களிற்கு ஏதாவது தீர்வினை வழங்கமுடியுமா என்பது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக” அவர் தெரிவித்தார்.