வவுனியாவில் தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி என்ற புதிய கட்சி உதயம்!!

751

புதிய கட்சி உதயம்

வவுனியாவில் ‘தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி’ என்ற புதிய கட்சி இன்று (29.09.2019) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றது.

வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களால் ஆரம்பிக்கப்ட்டிருக்கும் இக்கட்சியின் தலைவராக எம்.ஆனந்தராஜா, செயலாளராக ஜெ.சந்திரப்பிரகாஸ், தேசிய அமைப்பாளராக ரி.ரஜனிகாந் ஆகியோர் செயற்படுகின்றனர்.

இக்கட்சியின் சின்னமாக இரட்டை மின்சாரக் கோபுரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் கட்சியின் மூவர்ணக் கொடியும் கட்சியின் தலைவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இக்கட்சி அறிமுக நிகழ்வில் கருத்து தெரிவித்த தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் எம்.ஆனந்தராஜா,

எமது மக்களின் உரிமை மற்றும் அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு இன, மத வேறுபாடு இன்றியும், ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவாலாக்கலை வலியுறுத்தி எமது கட்சி செயல்படும்.

மூவின மக்களை சார்ந்த கட்சியாக சாதி மதங்களை கடந்து இக்கட்சி செயலாற்றும், பட்டதாரிகள் சங்கமானது இன்றிலிருந்து கட்சியாக செயல்படும்.

இப்போது வடமாகாணத்தை பிரதிபலித்து செயல்படும் இக்கட்சியானது எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்திற்கு விரிவு படுத்தப்படும்.தேசிய ஜனநாயக மக்கள் முன்னணியானது மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் சேர்ந்து செயல்படும் என தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் சந்திர பிரகாஸ் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் சில கட்சிகளுக்காக தேர்தல் காலங்களில் பேரம் பேசலுடன் செயற்பட்டிருந்தோம். ஆனால் தேர்தலின் பின் எமது கோரிக்கைகள் அக் கட்சிகளால் நிராகரிக்கப்பட்டிருந்தது ஆகவே அதன் விளைவாக பட்டதாரிகள் சங்கம் புதிதாக இக்கட்சியை நிறுவியுள்ளது என தெரிவித்தார்.