புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த தரணியா விவேகானந்தராசா 192 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், குறித்த பாடசாலையில் 32 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர்.
வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
பரீட்சைக்கு தோற்றிய 56 மாணவர்களில் 32 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
அத்துடன், தனியார் கல்வி நிலையங்களை நாடாது பாடசாலை கல்வியை மட்டும் பெற்று குறித்த பாடசாலை மாணவர்கள் 56 பேரும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
குறித்த பாடசாலையில் அதிபர் திருமதி கமலாம்பிகை சொக்கலிங்கம் அவர்களின் வழிநடத்தலில் ஆசிரியர்களான திருமதி.ச.மங்களவதனா, செல்வி.குவேனி ஆகியோர் குறித்த மாணவர்களை வழிநடத்தியிருந்தனர்.
வவுனியா வடக்கு வலயத்தில் தொடர்ந்து ஆறாவது வருடமாக குறித்த பாடசாலை முதலிடத்தை தக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.