அமெரிக்காவில் தொடரும் பனிப்புயல் : 13 பேர் உயிரிழப்பு!!

620

AMERICA

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பொஸ்டன் முதல் நியூயோர்க் வரையிலான நகரங்களில் வீசி வரும் பனிப்புயலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அப்பகுதியில் கடும் பனிப்பொழிவுடன் காற்றும் வீசி வருகிறது. இதனால் இரவு நேர வெப்பநிலை பூஜ்சியத்துக்கும் கீழே சென்றுள்ளது. வீதிகளில் பனிக்கட்டிகள் குவிந்துள்ளதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆயிரக்கணக்கான விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு நியூயோர்க் மேயராக பொறுப்பேற்றுக் கொண்ட பில் தே பிளாசியோ இதுகுறித்து கூறுகையில்..

வரும் நாள்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். எனவே, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். அவசியம் வெளியில் செல்ல வேண்டியிருந்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். குறிப்பாக வாகனங்களில் செல்வதைத் தவிர்க்கவும் என்றார்.

இதற்கிடையே வடகிழக்கு குளிர்கால புயல் தொடங்கி இருப்பதால், காற்றின் வேகம் அதிகரித்து வெப்பநிலை மேலும் மோசமாகும் என அமெரிக்க தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நியூயோர்க்கின் தரைப்பரப்பில் 6 அங்குல அளவுக்கு பனி படர்ந்துள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 33 கி.மீ. ஆக உள்ளது.

நியூயோர்க் மற்றும் பொஸ்டன் நகரங்களில் வெப்பநிலை மைனஸ் 10 டிகிரி பாரன்ஹீட்டாகக் குறையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பனிப்புயல் காரணமாக இப்பகுதியில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக, மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வீதி விபத்துகளே இந்த உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளன.

இதேவேளை ஆளுநர் ஆண்ட்ரு கியூமோ அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார். லாங் தீவுகள் முதல் அல்பனி வரையிலான 3 முக்கிய நெடுஞ்சாலைகளை இரவு நேரங்களில் மூட உத்தர விட்டுள்ளார்.

பொஸ்டன் நகரில் 2 அடி உயரத் துக்கும் சிகாகோ உள்ளிட்ட மற்ற நகரங்களில் 18 அங்குல அளவிலும் பனி படர்ந்துள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.