தபால்மூல வாக்களிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்காக வவுனியா மாவட்டத்தில் ஐயாயிரத்து 38 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த நிலையில், 898 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.ஜி.லலித் ஆனந்த தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 333 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களில் ஐயாயிரத்து 38 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்திருந்த நிலையில், உரிய வகையில் விண்ணப்பத்தை பூரணப்படுத்தாமை மற்றும் தவறான தகவல்கள் வழங்கியமை காரணமாக 898 அரச உத்தியோகத்தர்களின் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி நான்காயிரத்து 140 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தபால் மூல வாக்கு எண்ணும் நடவடிக்கைக்காக 9 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட தபால் மூல வாக்குகளும் வவுனியா மாவட்ட செயலகத்திலேயே எண்ணப்படும்.

அத்துடன், தற்போது தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தொரிவித்தார்.




