வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய வெளிநாட்டு அகதி!!

625

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட நிலையில் தப்பியோடிய வெளிநாட்டு அகதி ஒருவர் இராணுவம் மற்றும் பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், மியன்மார், பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அகதிகளில் 18 வயது இளைஞன் ஒருவர் காலை 4 மணியளவில் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பி ஓடியிருந்தார்.

இதனையடுத்து காலை பொலிசாரும், இராணுவமும் இணைந்து புனர்வாழ்வு நிலையம் அமைந்துள்ள பகுதி மற்றும் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள வீடுகள், வீதிகளில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது முகாமுக்கு முன்னால் உள்ள ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றின் கூரையின் பிளேற்றில் (மொட்டை மாடி) குறித்த இளைஞன் அவ் வீட்டாருக்கு தெரியாது மறைந்திருந்தமை பொலிசாரால் கண்டு பிடிக்கப்படடது.

பொலிசார் குறித்த இளைஞனை பிடிக்க முயன்ற போது வீட்டின் கூரையின் மேற்ப்பகுதியில் இருந்து குதித்து ஓட முயன்றுள்ளார்.

இருப்பினும் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்து மீண்டும் புனர்வாழ்வு நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் காலை அப்பகுதியில் பரபரப்பான நிலையும், மக்கள் மத்தியில் அச்சமும் ஏற்பட்டிருந்தது.