குழந்தை மீட்பு நடவடிக்கையில் கடும் பின்னடைவு : சுஜித்தை மீட்க அதிகாரிகளின் திட்டம் இதுதான்!!

784

குழந்தை மீட்பு நடவடிக்கை

திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க இதுவரையான அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், அதி நவீன கருவியான ரிக் இயந்திரத்தை வரவழைக்க அதிகாரிகள் தரப்பு முடிவு செய்துள்ளது.

திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணறு ஒன்றில், விழுந்துள்ளார். மீட்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக 30 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருந்த சுஜித் தற்போது 85 அடி ஆழத்திற்கு கீழே நழுவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து புதிய முயற்சியாக, குழந்தை சிக்கி உள்ள ஆழ்துளை கிணற்றுக்கு அருகே மற்றொரு பள்ளம் தோண்டி சுரங்கம் அமைத்து, 3 தீயணைப்பு படை வீரர்களை உள்ளே அனுப்பி குழந்தையை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுமார் மூன்று மீற்றர் தூரத்தில் இந்த பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ரிக் எனப்படும் கருவி இதற்காக பயன்படுத்தப்படுகிறது.

அதி நவீன வசதிகள் கொண்ட இந்த கருவியானது எண்ணை கிணறுகள் உள்ள பகுதிகளில் எளிதாக துளையிட்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது. செல்போன் டவர் போல மிக உயரமானது. ஆனால் இந்த கருவியை நிகழ்வு இடத்துக்கு வந்து சேர்வதற்கு குறைந்த பட்சம் 4 மணி நேரம் ஆகுமாம்.

அதன்பிறகு 90 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு சுமார் 4 மணி நேரம் ஆகும். எனவே நாளை அதிகாலையில் தான் குழந்தையை மீட்பதற்கான, வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே அனைத்து உபகரணங்களுடன், சுரங்கத்தின் வழியே உள்ளே சென்று குழந்தையை மீட்பதற்காக, 3 தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே சுற்றுவட்டாரப் பகுதியில் மழை பெய்து வருவதால், மீட்பு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.