கடும் குளிரால் அமெரிக்க மக்கள் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையே எல்லையாக பரந்து விரிந்து கிடக்கும், உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போய் பார்ப்போருக்கு பெரும் பிரமிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவே உலக மக்களின் கண்களில் பெரும் காட்சிப் பொருளாக மாறி மாபெரும் ஐஸ் கட்டி நாடாக மாறிக் கிடக்கிறது.
எங்கு பார்த்தாலும் பனிக் கட்டிகள், ஐஸ் கட்டிகள், கடும் குளிர், பனிக் காற்று… கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பயங்கரமான பனிக்காற்றையும், ஆட்க்டிக் பிரதேசத்தில் வீசி வரும் பனிப் புயலால் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான குளிர் காற்றையும் தாங்க முடியாமல் அமெரிக்கா நடுங்கிக் கிடக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையே இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
அதைப் படம் எடுக்க பலரும் குளிரையும் பொருட்படுத்தாமல் நயாகராவுக்குப் படையெடுக்கின்றனர். நயாகரா கிட்டத்தட்ட முழுமையாக உறைந்து விட்டது. மேலிருந்து பெரும் சத்தத்துடன் விழும் தண்ணீர் தற்போது ஐஸ் கட்டியாக காட்சி தருகிறது.
கீழே பார்த்தால் ஐஸ் மலைகளாக மாறி நிற்கின்றது தண்ணீர் தடாகம். அமெரிக்கப் பகுதியில் உள்ள நயகாராவில் உறைந்து போயிருக்கும் பகுதிகள் நிறைய உள்ளன.
மொத்தம் 3 இடங்களில் தண்ணீர் உறைந்து ஐஸ் கட்டியாக காட்சியளிக்கிறது. நயகாரா உள்ள பகுதியான அமெரிக்காவின் மிட்லேன்ட்டில் உள்ளது.
இந்தப் பகுதியில்தான் பயங்கர குளிர் நிலவுகிறது. அதாவது மைனஸ் 37 டிகிரி செல்சியஸாக இங்கு குளிர் காணப்படுகிறது. நயாகரா உறைந்து போயிருப்பதைக் காண கடும் குளிரையும், உயிர் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் அங்கு வந்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
நயகாராவின் உறைந்த நீரையும், அங்கிருந்து வெளிக் கிளம்பும் பனி மூட்டப் புகையையும் பார்க்க மக்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். நயாகரா நீர்வீழ்ச்சி பூங்கா மற்றும் ரெயின்போ பாலத்திலிருந்து இதை நன்றாக காண முடிவதால் அங்குதான் கமராக்களுடன் மக்களைக் காண முடிகிறது.
நீர்வீழ்ச்சியின் கீழே தண்ணீர் விழும் இடத்தில் ஐஸ் கட்டிகள் மலை போல குவிந்து கிடக்கின்றன. அதில் விழும் தண்ணீரிலிருந்து வெண்ணிறப் புகை எழுகின்றது.
1912ம் ஆண்டில்தான் நயாகாரா கடும் பனி காரணமாக உறைந்து போயிருந்ததாம். அதற்குப் பிறகு இப்போதுதான் உறைந்துள்ளது என்று கூறுகிறார்கள்.
இன்னும் சில நாட்களில் இந்த பனியின் தாக்கம் குறையும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துருவப் பனிப் புயல் மெல்ல மெல்ல நின்று குளிரும், கடும் பனியும் குறைந்து இயல்பு நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத மத்திக்குள் நிலைமை சகஜமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.





