மக்களே அவதானம்

வவுனியாவில் அண்மைய நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக பாரியளவில் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வவுனியா நகர்ப் பகுதிகளில் பெருகிவரும் பாரிய டெங்கு நோயை, கட்டுப்படுத்தும் நடவடிக்கை கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது வவுனியா நகர்ப் பகுதியில் 761 வீடுகளில் பார்வையிடப்பட்டு அங்கு பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அன்றைய தினத்தில் 335 நுளம்பு பெருக்கெடுக்கும் இடங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் பத்து இடங்களில் நுளம்புக் குடம்பிகள் கண்டெடுக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை இந்நடவடிக்கை எதிர்வரும் சில தினங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதுடன் எதிர்வரும் 28ஆம் திகதி வரையும் பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் கால அவகாசம் வழங்கப்பட்ட பகுதிகள் பார்வையிடப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

நேற்று வரை 310இற்கும் அதிகமான டெங்குநோயாளர்கள் அடையளம் காணப்பட்டுள்ளனர். அந்தவகையில், வவுனியாவில் டெங்கு கட்டுப்பாடு தொடர்பான நடவடிக்கைகளை பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.மகேந்திரன் கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




