வவுனியா நகரசபையின் அதிரடி : ஒரே நாளில் 90 கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு!!

745

வவுனியா நகரசபையின் அதிரடி

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குழைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு இடைஞ்சல்கள் தினசரி ஏற்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில்,

வவுனியா நகரசபையினால் நகரசபை உறுப்பினர்களின் மாடுகள் உட்பட 90க்கு மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையினரால் வவுனியா நகர், பட்டாணிச்சூர், வேப்பங்குளம், ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் (02.12.2019) இரவு 11 மணி முதல் நேற்று (03.12.2019) அதிகாலை 4 மணிவரை 90க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள் வவுனியா நகரசபை வளாகத்திலும் வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள நகரசபையின் கழிவகற்றல் நிலையத்திலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

மாட்டின் உரிமையாளர்கள் பிடிகூலி 600ரூபா, தண்டம் 1000ரூபா, ஒர் நாள் பராமரிப்பு செலவு 300 ரூபா ஆகியவற்றினை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பராமரிப்பு செலவு நாளாந்தம் 300ரூபா விதிக்கப்படுமென நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாக வவுனியாவில் இக் கட்டாக்காலி மாடுகளால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறுகள் ஏற்பட்டதுடன், பல வீதி விபத்துக்களும் ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.