வவுனியா செட்டிகுளம் விவசாயிகளின் அவலம்!!

619

செட்டிகுளம் விவசாயிகளின் அவலம்

வவுனியா – செட்டிகுளத்தில் விவசாயிகள் யானைகளின் தொல்லைக் காரணமாக பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

தினமும் விவசாய நிலங்களுக்குள் நுழையும் யானைகளினால் அவர்களின் விவசாய நிலங்கள் அழிவடைந்து வருவதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுமார் 60 ஏக்கர் வரையிலான உழுந்து பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ள நிலையில் பல ஏக்கர் நெல் பயிர்ச்செய்கையும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அரசடிகுளம், மதவுவைத்தகுளம், பாவக்குளம், ஒன்பதாம் யூனிட் பெரிய புளியாலங்குளம் ஆகிய கிராம விவசாயிகளே யானையினால் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

நேற்றிரவு யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் குடிமனைகளுக்குள் புகுந்தமையினால் உழுந்து பயிர்ச்செய்கைகள் மற்றும் நெல் பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செட்டிகுளம் பிரதேச கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ந. விமலேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்.

விவசாயிகள் தமது செய்கைக்கு காப்புறுதி செய்யப்பட்டிருந்தால் நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு எம்மால் ஆவண செய்யப்படும். இது தொடர்பில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கமநல காப்புறுதி அபிவிருத்தி சபை மற்றும் சில தனியார் வங்கிகளிலும் இவ்வாறு காப்புறுதி செய்ய முடியும். கடந்த வருடமும் இவ்வாறான பாதிப்புக்குள்ளாகிய விவசாயிகளுக்கு நாம் காப்புறுதியை பெற்றுகொடுத்திருந்தோம்.

ஆகவே காப்புறுதி செய்யப்பட்ட விவசாயிகளாயின் அவர்களுக்கு எம்மால் நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.