வவுனியாவில் இரு நாட்களில் 160 கட்டாக்காலி மாடுகள் நகரசபையினரால் பிடிப்பு!!

654

கட்டாக்காலி மாடுகள்

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கடந்த சில நாட்களாக கட்டாக்காலி மாடுகளினால் தினசரி வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன் போக்குவரத்துக்கும் இடையூராக காணப்பட்டு வந்த நிலையில் கடந்த இரு நாட்களில் மாத்திரம் 160க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகளை வவுனியா நகரசபையினர் பிடித்துள்ளனர்.

வவுனியா நகரசபையினரால் கடந்த 02.12.2019 அன்று இரவு ஐந்து மணித்தியாலயத்தினுள் 90 மாடுகள் பிடிக்கப்பட்டதுடன் நேற்றையதினம் (04.12.2019) இரவு 11 மணி முதல் இன்று (05.12.2019) அதிகாலை 4 மணிவரை வவுனியா நகரசபையினரால்

வவுனியா நகர், பட்டாணிச்சூர், வேப்பங்குளம், பண்டாரிகுளம், திருநாவற்குளம், கோவிற்குளம் போன்ற பகுதிகளில் 70க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த 02.12.2019 அன்று வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பிடிக்கப்பட்ட 90 மாடுகளில் 86 மாடுகளின் உரிமையாளர்கள் தண்டப்பணம் செலுத்தி மாட்டினை பெற்றுள்ளதுடன் நேற்றையதினம் (04.12.2019) பிடிக்கப்பட்ட மாடுகள் உட்பட தற்போது 76 மாடுகள் வவுனியா நகரசபை வளாகத்திலும் வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள நகரசபையின் கழிவகற்றல் நிலையத்திலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பிடிக்கப்பட்ட மாடுகளில் வவுனியா நகரசபை உறுப்பினர்களில் மாடுகளும் உள்ளடங்குவதுடன் தண்டப்பணம் செலுத்தி பெற்றுக்கொண்ட மாடுகளும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாட்டின் உரிமையாளர்கள் பிடிகூலி 600ரூபா, தண்டம் 1000ரூபா, ஒர் நாள் பராமரிப்பு செலவு 300 ரூபா ஆகியவற்றினை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பராமரிப்பு செலவு நாளாந்தம் 300ரூபா விதிக்கப்படுமென நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.