வவுனியாவில் தொடர் மழையால் 283 குடும்பங்களைச் சேர்ந்த 887 பேர் பாதிப்பு!!

589

வவுனியாவில் தொடர் மழையால்..

வவுனியாவில் தொடர்மழை காரணமாக 283 குடும்பங்களைச் சேர்ந்த 887 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் 5 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வவுனியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதகரித்துள்ளதுடன், தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீரில் முழ்கியுள்ளன.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மருதோடை, வெடிவைத்தகல், ஊஞ்சல்கட்டி, புளியங்குளம் தெற்கு, நெடுங்கேணி தெற்கு, மாமடு, அனந்தர் புளியங்குளம், கற்குளம், நைனாமடு, புளியங்குளம் வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குரிய 196 குடும்பங்களைச் சேர்ந்த 593 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 9 வீடுகளும் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவின் நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவில் 86 குடும்பங்களைச் சேர்ந்த 293 பேர் பாதிப்படைந்ததுள்ளதுடன், 45 வீடுகளும் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் மருதமடுவ பகுதியில் ஒருவர் பாதிப்படைந்துள்ளதுடன், ஒரு வீடும் சேதமடைந்துள்ளது. இதன்படி வவுனியா மாவட்டத்தில் 283 குடும்பங்களைச் சேர்ந்த 887 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 55 வீடுகள் பகுதியளவு பாதிப்படைந்துள்ளன.

மேலும் வவுனியா வடக்கில் மருதோடை, இராமனூர், பழையவாடி, புளியங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 4 நலன்புரி நிலையமும், செட்டிகுளம் அடைக்கலமாதா வித்தியாலயத்தில் ஒரு நலன்புரி நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

நலன்புரி நிலையங்களில் 152 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கி வருகின்றது.