வவுனியாவில் தீர்த்தமாடச் சென்ற இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு!!

547

தீர்த்தமாடச் சென்ற இளைஞன்

வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் பிள்ளையார் ஆலயத்திற்கு பிள்ளையார் கதை தீர்த்தமாடல் நிகழ்வுக்கு சென்ற இளைஞரொருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஈச்சங்குளம் பகுதியில் பிள்ளையார் கதை தீர்த்தமாடல் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வின் இறுதியில் ஊர்மக்கள் கூடி தவசியாகுளம் தீர்தக்குளத்தில் கொடிக்கம்பம் நாட்டி தீர்த்தமாடும் நிகழ்வு மரபுரீதியில் பாரம்பரியமாக நடைபெற்று வருகின்றது.

இதன்போது குறித்த தீர்த்தக்குளத்தில் நீராடிக்கொண்டிருந்த ஈச்சங்குளத்தைச் சேர்ந்த ஜெகநாதன் துஷ்யந்தன் வயது 27 என்ற இளைஞர் தாமரைக் கொடியில் சிக்கி நீரில் மூழ்கியுள்ள நிலையில்,

பல மணி நேர போராட்டங்களின் பின் குறித்த இளைஞரை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.