வவுனியா போக்குவரத்து சபை பேரூந்துக்கள் வழமைக்கு திரும்பின!!

461


போக்குவரத்து சபை பேரூந்துக்கள்



இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையின் ஊழியர்களினால் இன்று (02.01.2020) காலை மேற்கொள்ளப்பட்ட பணிபகிஸ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் காலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் 11 மணியளவில் கைவிடப்பட்டுள்ளது.



பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.




இதன் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலைக்கு சொந்தமான எந்த பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டிருக்கவில்லை.


இந்நிலையில் ஊழியருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்த நிலையில் பகிஸ்கரிப்பு தொடர்ந்து இடம்பெற்று வந்திருந்தது.

இதன்போது பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடிய சாலை முகாமையாளர் அவர்களது கோரிக்கையான பதவி உயர்வு வழங்கப்பட்டு அப்பதவி இரத்து செய்யப்பட்டவர்களை தொடர்ந்தும் அதே பணியில் வைத்திருக்காது நியமன கடிதத்தின் பிரகாரம் எவ்வாறான பதவி வழங்கப்பட்டதோ அப்பதவிகளுக்கே அவர்களை இன்றிலிருந்து நியமிப்பதாக தெரிவித்ததையடுத்து பணி பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டு சேவையில் ஈடுபட்டுள்ளனர்.