இலங்கை – இந்திய கிரிக்கெட் போட்டிக்கு விசேட பாதுகாப்பு..!

372

பிரித்தானியாவில் இன்று இடம்பெறும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண தொடரின் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அந்நாட்டு பொலிஸாரிடம் விடுத்துள்ளார்.

விசேட பாதுகாப்பு தொடர்பில் இலங்கை உயர்ஸ்தானிகர் மூலமாக ஸ்கொட்லாந்து பொலிஸாருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன அமுனுகம தெரிவித்தார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியின் போது தமிழ் உணர்வாளர்களினால் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக அவுஸ்திரேலியாவுடன் இடம்பெற்ற போட்டியின்போதும் இலங்கை அணிக்கு எதிரான நடவடிக்கைகள் பிரித்தானியாவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே இன்றைய போட்டியின் போதும் குழப்பமான சூழ்நிலை நிலவப்பெறும் பட்சத்தில் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.