வவுனியாவில் குப்பை கொட்டும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் : ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் சர்ச்சை!!

597

ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில்..

வவுனியா புதிய சாளம்பைக்குளம் பகுதியில் (யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்திற்கு முன்பாக) குப்பை கொட்டப்படும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் தொடர்பாக நேற்று முன்தினம் (25.02.2020) வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சர்ச்சை ஏற்பட்டது.

சாளம்பைக்குளம் குப்பைமேடு தொடர்பான விடயம் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதன் போது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் குப்பை கொட்டும் இடத்தில் காணி வழங்கப்பட்டது தவறு,

அத்துடன் வவுனியாவில் பல வருடகாலமாக குடியேறியுள்ள மக்களுக்கு இதுவரையில் காணி உறுதி கிடைக்கப்பெறவில்லை ஆனால் தற்போது புதிய சாளம்பைக்குளத்தில் குடியேறியவர்களுக்கு காணி உறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் இணைப்பாளரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான அப்துல் பாரி 1500 பிள்ளைகள் அங்கு படித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் மக்கள் இல்லையா? , அத்துடன் சட்ட ரீதியாக தான் குறித்த இடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதற்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் குப்பை கொட்டும் இடத்தில் வீடு வழங்குவது தானா சட்டம் என கேள்வி எழுப்பினார்.

இதன் போது பாராளுமன்ற அப்துல் பாரி, தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் இடையே பல்வேறு கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றது. இதன் காரணமாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பரபரப்பான நிலையில் காணப்பட்டது.

அதன் பின்னர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் குப்பைகளை இலகுவான முறையில் அகற்றுவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமை நாம் யாவரும் அறிந்த விடயம்,

அவர் பலர் தொழிநுட்ப முறைகளில் இதனை கையாண்டு வருகின்றார். அத்துடன் குறித்த புதிய சாளம்பைக்குளம் பகுதியில் புதிதாக வீடுகள் அமைப்பதினை நிறுத்துமாறு வவுனியா பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுத்தமையினையடுத்து நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஒரு சில அரசியல்வாதிகளில் இலாப நோக்கத்திற்காக தான் இவ்விடத்தில் வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டது. இருந்தாலும் மக்கள் அதில் பாதிப்படைவதினை ஏற்றுக்கொள்ள முடியாது அதில் குடியேறியுள்ள மக்கள் பாதிப்படையாத வகையில் தொழிநுட்ப முறையினை மாற்றி குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இறுதியாக தெரிவித்தார்.