உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கி வரும் நிதி நிறுத்தம் : டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு!!

568

டொனால்ட் ட்ரம்ப் அதிரடி..

உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கி வரும் நிதியை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்றது.

இது வரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உலகம் முழுவதும் 1,998,109 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 126,603 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் 613,886 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 26,047 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்த முக்கிய தகவல்களை சீனா மறைத்து விட்டதாகவும், வைரஸின் தீவிர தன்மை குறித்து உலக நாடுகளுக்கு எச்சரிகை விடுக்காமல் உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகவும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகின்றார்.

உலக சுதார அமைப்பின் தாமதமான செயற்பாடுகளே உலக நாடுகள் இவ்வாறான பாதிப்பை சந்திக்க காரணம் எனவும் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயற்பட்டு வைரஸ் விவகாரத்தில் உண்மையை மறைத்துள்ளது. ஆகையால் அந்த அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய டொனால்ட் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பின் தவறான நிர்வாகம் மற்றும் வைரஸ் குறித்த தகவல்களை உலக நாடுகளுக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்தமை தொடர்பாக விரிவான மதிப்பீடு செய்ய தனது உத்தரவிட்டுள்ளார்.

அந்த மதிப்பீட்டு விசாரணை முடியும் வரை உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதி அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, அமெரிக்காவே உலக சுகாதார அமைப்பிற்கு அதிக நிதி வழங்கி வரும் நாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.