கடுகதி புகையிரதம்..

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி ரயில் இன்று(08.07.2020) காலை ரயில் கடவையைவிட்டு தடம் புரண்டதால் வடபகுதிக்கான ரயில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதுடன் பயணிகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று அதிகாலை 5.50 வவுனியா ரயில் நியைத்திலிருந்து கடுகதி ரயில் ஒன்று கொழும்பை நோக்கி பயணத்தை மேற்கொண்டபோது 6.15 மணியளவில் பூனாவை பகுதியில் ரயில் கடவையை விட்டு தடம் புரண்டு இரண்டு கிலோ மீற்றர் தூரம் ரயில் பெட்டிகள் இழுத்து செல்லப்பட்டுள்ளது.

எனினும் ரயிலில் பயணித்த பயணிகள் உட்பட புகையிரதத்திற்கு எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை இச்சம்பவத்தினால் வடபகுதிக்கான ரயில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் தடம்புரண்ட பெட்டிகளை புனாவை ரயில் கடவையில் விட்டு விட்டு ஏனைய எஞ்சிய பெட்டிகளுடன் ஒரு மணி நேரம் தாமதத்தின் பின்னர் 6.55 மணியளவில் கடுகதி ரயில் மீண்டும் கொழும்பை நோக்கிய தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது .

இச்சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற தொழிநுட்பவியலாளர்கள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ரயில் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர் .






