வவுனியாவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு!!

848

தபால் மூல வாக்களிப்பு..

பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று (13.07.2020) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையிலும் காலை 8.30 மணி தொடக்கம் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் ஊழியர்கள் முகக்கவசம் அணிந்தவண்ணமும் கைகளை சுத்தம் செய்ததின் பின்னருமே வாக்களிப்பு நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

எதிர்வரும் 17 ஆம் திகதி வரை கட்டம் கட்டமாக தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் முப்படையினர், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அரச உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன்,

16 மற்றும் 17 ஆம் திகதிகளில் முப்படையினர், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் ஆகியோரும் இந்த 5 நாட்களிலும் வாக்களிக்க முடியாத அரச உத்தியோகத்தர்கள், தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்திலிருக்கும் தேர்தல் காரியாலயத்தில் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன்ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்ய 2 இலட்சத்து 87 ஆயிரத்து 13 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.