வன்னி தேர்தல் மாவட்டத்தில் இழப்பை சந்தித்த கூட்டமைப்பு!!

956

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களது பெயர்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது.

2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் பங்களிப்புடன் இடம்பெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 22 நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெற்றுக்கொண்ட நிலையில், 2010ஆம் ஆண்டு 14 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தபோதிலும், 2015ஆம் ஆண்டு 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தனர்.

இந்நிலையில் நல்லாட்சி அரசு காலத்தில் அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாடுகளுக்கு மறைமுக ஆதரவளித்ததன் ஊடாக கடும் விமர்சனங்களை சந்தித்திருந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்தித்திருந்தது.

இந்நிலையில் வடக்கு கிழக்கில் 10 ஆசனங்களை பெற்றுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்னி தேர்தல் தொகுதியில் 3 ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளது.

கடந்த முறை செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வைத்தியகலாநிதி சி. சிவமோகன், சிவசக்தி ஆனந்தன் என தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேசியப்பட்டியலின் ஊடாக சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவும் நாடாளுமன்ற பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இதன் காரணமாக வன்னியில் 5 நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துடன் செயற்பட்ட கூட்டமைப்பு இம்முறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி. சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோருடன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய சிவசக்தி ஆனந்தனையும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் இருந்து வன்னி வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர்.

2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு கடந்த நாடாளுமன்ற தேர்தலிகளில் தோல்வியுற்றிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக வினோ நோகதாரலிங்கம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வன்னியில் கடும் சவாலாக காணப்பட்ட பொதுஜன பெரமுனவின் முதன்மை வேட்பாளரான கே.கே.மஸ்தானும் இரண்டாவது தடவையாகவும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து 40 நாட்களில் தேர்தலை சந்தித்திருந்த மஸ்தான் சுதந்திர கட்சியில் சிறுபான்மை இனங்களில் வெற்றிபெற்ற ஒரு வேட்பாளராக காணப்பட்டிருந்தார் என்பதுடன் இடையில் எற்பட்ட அரசியல் மாற்றத்தினால் 53 நாட்கள் பிரதி அமைச்சராகவும் செயற்பட்டிருந்தார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியினூடாக இம்முறை வன்னியில் களமிறங்கிய ரிசாட் பதியுதீன் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச காலத்தில் மீள்குடியேற்ற அமைச்சராகவும் நல்லாட்சி காலத்தில் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சராக இருந்த ரிசாட் பதியுர்தீன் வில்பத்து காடழிப்பு விவகாரம், ஈஸ்டர் கு ண்டுத் தா க் கு த ல் விடயங்கள் தொடர்பில் கடும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துவரும் நிலையில் வன்னியில் அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளார்.

இதேவேளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட கு.திலீபன் வேறு எந்த தேர்தலிலும் போட்டியிடாது நேரடியாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

-தமிழ்வின்-