கதிரேசு வீதி..

வவுனியா நகரசபைக்குட்பட்ட கதிரேசு வீதி கடந்த மூன்று வாரங்களாக இருளில் முழ்கியுள்ளதாகவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வடக்கின் வரவேற்பு வாசலாக வவுனியா மாவட்டம் திகழ்கின்ற போதிலும் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதியில் புகையிரத நிலையத்திற்கு அருகேயுள்ள கதிரேசு வீதியில் உள்ள வீதி மின்விளக்குகள் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக ஒளிரவில்லை.

இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் வவுனியா நகரசபையில் பொதுமக்கள் முறையிட்டுள்ள போதிலும் நகரசபையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன் குறித்த வீதி இருளில் முழ்கியுள்ளமையினால் தாம் அச்சத்தில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இந் நிலையில் வவுனியா நகரசபையின் அசமந்தபோக்கு திருடர்களுக்கு வாய்ப்பாக அமையும் நிலை கதிரேசு வீதிக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனத்தினை செலுத்தி உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





