மக்களின் காணிகளுக்கு மூன்று மாதங்களுக்கு உறுதிகள் : ஜனாதிபதி தெரிவிப்பு!!

382


மக்கள் பயன்படுத்தி வரும் பிரச்சினைகள் இல்லாத காணிகளுக்கு மூன்று மாதங்களுக்குள் காணி உறுதிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



காணி உறுதிகள் இல்லை என்பது நாடு முழுவதும் பல மாவட்டங்களில் தான் விஜயம் செய்த போது மக்கள் முன்வைத்த பிரதான பிரச்சினை என ஜனாதிபதி கூறியுள்ளார்.

பல பரம்பரைகளாக வாழ்ந்து வந்து, கமத்தொழிலில் ஈடுபட்டு வந்தாலும் காணி உறுதி இல்லாத காரணத்தினால், அவர்கள் கடும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.



இந்த பிரச்சினையை தீர்க்க நாடு மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு பொருந்தும் வகையில் காணி கொள்கையில் திருத்தங்களை செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.



ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற காணி முகாமைத்துவ நடவடிக்கைகள், அரச துறைகள், காணி மற்றும் வளங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.


காணி உறுதிகள் இல்லாத காரணத்தினால் மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன் நாட்டின் அபிவிருத்தியும் பாரிய பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது.

கமத்தொழில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் போது காணி பயன்பாட்டு கொள்கை மிகவும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.