கிளிநொச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை வெள்ளை நிற நாவல் இனம்!!

1817

அரியவகை வெள்ளை நிற நாவல்..

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலக பிாிவில் உழவனூர் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியில் அரியவகை வெள்ளை நிற நாவல் இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உழவனூர் கிராமத்தில் வசிக்கும் வல்லிபுரம் இராஜேந்திரம் என்பவரின் காணியிலே குறித்த வெள்ளை நிறத்திலான புதிய இன நாவல் மரம் இனம் காணப்பட்டுள்ளது.

குறித்த விவசாயி நேற்று முன்தினம் தனது காணியில் உள்ள தோட்டக் கிணற்றை துப்பரவு செய்யும் பணியின் போது குறித்த நாவல் மரத்தின் பழங்கள் வித்தியாசமாக இருப்பதனை அவதானித்த அவர் அதனை பிடுங்கி உண்ட போது அவை நன்கு பழுத்த நாவல் பழங்களாக காணப்பட்டுள்ளன.

நாவல் மரம் அதன் தோற்றம் என்பன வழமையான நாவல் மரம் போன்றே காணப்படுவதுடன் காய்களும் வழமையான நாவல் காய்கள் போன்றே உள்ளன.

ஆனால் பழங்கள் மாத்திரம் வெள்ளை நிறமாக அதாவது நெல்லிக்காய் நிறத்தில் காணப்படுகின்றன. பழத்தின் சுவையும் வழமையான பழத்திலிருந்து வேறுபட்டு காணப்படுவதாக கூறப்படுகிறது.

குறித்த பிரதேசத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீற்றர் தொலைவில் சுண்டிக்குளம் பறவைகள் சரணலாயம் காணப்படுகிறது. எனவே குறித்த பறவைகள் சரணலாயத்திற்கு அவ்வவ்போது பருவகால பறவைகள் வந்துபோவது வழமை.

அங்கு வருகின்ற பருவகால பறவைகள் சில உழவனூர் கிராமத்தில் இவரது காணியின் அருகில் உள்ள சிறிய நீர்த்தேக்கத்திற்குள் காணப்படும் மரங்களில் இரவில் தங்குவது வழமை.

எனவே அவ்வாறு வருகை தந்த பருவகால பறவைகளின் எச்சங்களால் குறித்த வெள்ளை நிற நாவல் இனம் உழவனூரில் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இவ் வகையான நாவல் இனங்கள் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் காணப்படுகின்றது எனவும் வழமையான நாவல் பழத்தில் காணப்படும் மருத்துவ குணங்களை விட இதில் அதிகளவான மருத்துவ குணங்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.