இலங்கை கடற்பரப்பிலுள்ள New Diamond கப்பலில் மீண்டும் தீப்பரவல்!!

1507

தீப்பரவல்..

இலங்கை கடற்பரப்பிலுள்ள New Diamond கப்பலில் மீண்டும் தீப்பரவ ஆரம்பித்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,

New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் கப்பலில் இருந்து அதிக உஷ்ணம் வெளியேறுவதால் இரசாயன பதார்த்தங்களையும் நீரையும் பயன்படுத்தி வெப்பத்தை தனிப்பதற்காக முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன.

கப்பலில் மீண்டும் தீ பரவாமல் இருப்பதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் கப்பல் தற்போது காணப்படும் அம்பாறை – சங்கமன்கண்டி கடற்பிராந்தியத்தில் இருந்து 30 கடல்மைல் தொலைவில் வீசும் பலத்த காற்று காரணமாகவும்,

கப்பலின் உட்பகுதியில் காணப்படும் அதிக உஷ்ணம் காரணமாகவும் மீண்டும் கப்பலில் தீப்பரவ ஆரம்பித்துள்ளது. என்ற போதும் இலங்கை கடற்படை, விமானப்படை,

இந்திய கடற்படை, இந்திய கரையோர காவல்படையினருக்கு சொந்தமான கப்பல்கள் மற்றும் விமானங்களை பயன்படுத்தி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-