சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணி இராணுவத்திடம் : ஜனவரி முதல் புதிய நடைமுறை!!

1026

சாரதி அனுமதிப்பத்திரம்..

சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் பணியை எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இராணுவமே மேற்கொள்ளும் என மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் ஜெனரல் சுமித் அழகக்கோன் தெரிவித்தார்.

தற்போது தனியார் நிறுவனம் ஒன்றே சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடுகின்றது. இந்நிறுவனம் ஒரு சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு தலா 1000 ரூபாவை அறவிடும் அதேவேளை மாதமொன்றுக்கு கிட்டத்தட்ட 75,000 அனுமதிப் பத்திரங்களை அச்சிடுகின்றது.

இவ்வாண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் குறித்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வருகின்றது. மேற்படி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் மீது கணக்காய்வு திணைக்களம் நடத்திய விசாரணையில் மில்லியன் கணக்கான பாரிய இழப்பு நாட்டுக்கு ஏற்பட்டமை தெரியவந்துள்ளது.

எனவே எதிர்வரும் 2021ம் ஆண்டு முதல் சாரதி அனுமதிப்பத்திரங்களை நியாயமான செலவில் அச்சிடும் பணியை இராணுவம் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.