சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடத்தப்படும்.
இதுவரை 10 உலகக் கிண்ணத் தொடர்கள் நடத்தப்பட்டுள்ளன. கடைசியாக 2010-11ல் இந்தியா, வங்கதேசம், இலங்கை நாடுகள் இணைந்து நடத்தின. வரும் 2015ல், 11வது உலக கிண்ணம் தொடரை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்த உள்ளன.
இந்நிலையில், வரும் 2019ல், 12வது உலகக் கிண்ணத் தொடரை நடத்தும் வாய்ப்பு இங்கிலாந்துக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் 5வது முறையாக இங்கிலாந்தில் உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது.
முன்னதாக 1975, 79, 83, 99ல் நடந்தது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும். ஐ.சி.சி., தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெறும்.
மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு தகுதிச் சுற்று நடத்தப்படும். இத்தொடருக்கான முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (இ.சி.பி.,) தெரிவித்தது.
இது குறித்து இ.சி.பி., தலைமை செயல் அதிகாரி டேவிட் கூலியர் கூறுகையில், இங்கிலாந்தில் வரும் 2019ல் உலகக் கிண்ணத் தொடரை நடத்த இருப்பதில் பெருமை அடைகிறேன்.
ஏற்கனவே நான்கு முறை நடத்தி உள்ளதால் இம்முறையும் சிறப்பாக நடத்தப்படும் என்று நம்புகிறேன். இத்தொடர் மூலம், இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம் என்றார்.