வவுனியாவில் மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்து : இருவர் பலி!!

1731


விபத்து..



வவுனியா, மடுகந்தைப் பகுதியில் வீதியை விட்டு விலகிய மோட்டர் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்துள்ளனர்.



இன்று (08.10.2020) மாலை 5.15 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,




வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை நோக்கி வேகமாக சென்ற மோட்டர் சைக்கிள் மழை காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.


குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இருவரது தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டபோதும் அவர்கள் இருவரும் மரணமடைந்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த இருவரது சடலங்களும் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


குறித்த விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், குறித்த இருவரும் ஹெல்மட் பட்டியை பூட்டாமல் சென்றமையாலயே தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியான 41வயதுடைய முகமது மாகீர் என்ற நபர் உ யிரிழந்துள்ளார் என பொலிஸாரினால் சடலத்தினை அடையாளம் கண்டுள்ளதுடன் மற்றையநபரின் சடலம் அடையாளம் காணப்படவில்லை.

விபத்தில் உயிரிழந்தவர்களின் தொலைபேசியின் இலக்கங்களை தொடர்பு கொண்டு சடலத்தினை அடையாளம் காணும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.