வவுனியாவில் உத்தரவை மீறி இயங்கும் சில தனியார் கல்வி நிலையங்கள்!!

1881

தனியார் கல்வி நிலையங்கள்..

கொவிட்-19 தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தனியார் கல்வி நிலையங்களையும் மூடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆயினும் இவ் அறிவித்தலை மீறி வவுனியாவில் பரவலாக தனியார் கல்வி நிலையங்கள் இயங்குவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

கொவிட் தாக்கத்தையடுத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியற் கல்லூரிகள் என்பனவும் மூடப்பட்டு வருகின்றன.

அரசின் முக்கிய திணைக்களங்களின் செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பல மாகாணங்களில் தனியார் கல்வி நிலையங்களையும் தற்காலிகமாக மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளூராட்சி திணைக்களம் ஊடாக தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு தெரிவித்திருந்தார்.

ஆனாலும், வவுனியாவில் பண்டாரிக்குளம், கூமாங்குளம், வைரவபுளியங்குளம், தோணிக்கல் போன்ற பகுதிகளில் சில தனியார் கல்வி நிலையங்கள் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக சில மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்வதால் அங்கு பாடத்திட்டம் முன்னோக்கி நகரும் என்பதால் அங்கு கற்ற அனைத்து மாணவர்களும் கொவிட் 19 அச்சத்துடன் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர்.