வவுனியாவில் கொவிட் 19 தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து அரச அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!!

937

விசேட கலந்துரையாடல்..

கொவிட் 19 தாக்கம் குறித்தும் எடுக்கப்பட வேண்டிய நிலமைகள் குறித்து வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் அவசர கலந்துரையாடல் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் தனியார் கல்வி நிலைய ஒன்றியத்தினர், வர்த்தக சங்கத்தினர், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர்,

தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர், பொலிசார், சுகாதார துறையினர், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது, வவுனியா மாவட்டத்தில் கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டி தீர்மானங்கள் குறித்து ஆராயப்பட்டன.

இதன்படி மறு அறிவித்தல் வரை வவுனியா மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் உட்பட அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் மறு அறிவித்தல் வரை திறக்க முடியாது எனவும்,

வவுனியா மாவட்டத்தின் நான்கு எல்லைகளிலும் பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் உட்பிரவேசிக்கும் அனைத்து வாகனங்களிலும் பயணிப்பவர்கள் மற்றும் சாரதி நடத்துனர்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டதுடன், வெப்பம் அளவிடுதலும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், அரசாங்கம் அறிவித்த கட்டுப்பாட்டு விலையில் ஒரு வாரத்திற்குள் பொருட்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா மாவட்டத்திற்கு தேவையான அரிசியினை பெற்றுக் கொள்வதற்கு இங்கு கொள்வனவு செய்யப்படும் நெல்லினை இந்த மாவட்டத்திலேயே குற்றி விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.