வவுனியா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தில் ஐவர் அனுமதி!!

1967


கொரோனா சந்தேகத்தில்..



வவுனியா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தில் ஐந்து பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



கிளிநொச்சிப் பகுதியில் வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் கம்பனி ஒன்றின் பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து குறித்த கம்பனி உத்தியோகத்தர்கள் குறித்த இருவரையும் இன்று (19.10) வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து வந்து அனுமதித்துள்ளனர்.




அவர்கள் அனுமதிக்கப்பட்டு ஒரு மணிநேரத்திற்கும் குறித்த கம்பனியில் வீதி திருத்த பணியில் ஈடுபட்டிருந்த மேலும் மூவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவர்களும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த ஐவரும் வவுனியா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த மூவர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.


இருப்பினும் வவுனியாவில் சமூகத் தொற்று இல்லை எனவும் வவுனியா வைத்தியசாலைக்கு தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வதை நிறுத்துமாறும் வைத்தியசாலை பணிப்பாளர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.