சிறுவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் : வைத்தியர் சி.யமுனாநந்தா!!

593

கொரோனா தொற்றானது தற்போது சமூகத்தில் வலுவாக பரவுகின்ற போது அது சிறுவர்களை தாக்கும் எனவும் இதனால் சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் யாழ்.மாவட்ட போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்.

கொரோனா தொற்றும் சிறுவர்களும் என்ற தொனிப்பொருளில் கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதே நேரம் சிறுவர்களுக்கு சாதாரணமாக இருமல், தடிமன், ஆஸ்மா போன்ற நோய்கள் இருக்கும் பொழுது அவர்களுக்கு கொரோனா தொற்றோ என்ற பயத்தில் சிகிச்சைக்கு செல்லாமல் விடக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

ஏற்கனவே ஆஸ்மா நோய் உள்ளவர்களுக்கு உரிய மருந்துகள் கிரமமாக கொடுக்கப்படவேண்டும்.

அதே போல தூசிகளுக்குள் விளையாடும் பொழுது தொண்டை அழற்சி நோய்கள் ஏற்படலாம்.

சிறுவர்களுக்கு அவ்வாறு வரும் போது அதற்குரிய மருந்து கொடுக்கவேண்டும்.

அதையடுத்து குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் சிறந்த போசணை மிக்க உணவுகளை சிறுவர்களுக்கு வழங்குவதன் மூலம் தொற்று ஏற்படும் காலங்களில் உடல்நிலை பாதிப்பதை தவிர்க்கலாம்.

குறிப்பாக புரதச்சத்து நிறைந்த பால் போன்றவற்றை எடுத்தல் வேண்டும்.

எனவே குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் பொழுது காய்ச்சல் இருக்கலாம், தொண்டை நோ இருக்கலாம், இருமல் இருக்கலாம் எனவே இவற்றை வைத்தியரின் ஆலோசனைப்படி கலந்தாலோசித்தல் வேண்டும்.

வீட்டில் குழந்தை உள்ளவர்கள் பொது இடங்களுக்கு சென்று விட்டு வந்து கைகளை நன்றாக கழுவி விட்டு வீட்டுக்குள் செல்ல வேண்டும்.

குறிப்பாக அதிகளவானோர் உள்ள வீடுகளில் சிறுவர்களுடன் அதிகளவில் நெருங்கி பழகுவதை தவிர்த்தல் வேண்டும்.

வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுமாயின் பெரியவர்கள் அல்லது அங்கு உள்ள மூத்தவர்கள் தான் காரணமாக இருப்பார்கள். எனவே அதற்குரியவாறாக அவதானமாக செயற்பட வேண்டும்.

அதே போல சிறுவர்களை வெளியிலிருந்து வருபவர்கள் கட்டி அணைத்து முத்தமிடுதல் போன்ற செயற்பாடுகளை தவிர்த்தல் வேண்டும்.

அவ்வாறு செய்வதானால் கைகளை நன்றாக கழுவுதல் வேண்டும். கண்டபடி ஆட்கள் வந்து குழந்தைகளை தொடுதலும் தொற்றை ஏற்படுத்தும்.

குறிப்பாக நெருக்கமான இடங்களில் அயலில் உள்ளவர்களுடன் விளையாடும் போதும், தொடுகையின் போதும் தொற்று ஏற்படலாம்.

எனவே தற்போதைய சூழ்நிலையில் சுகாதார பழக்கவழக்கங்களான கைகளை கழுவுதல் போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுதல் நல்லது.

நோயினால் சிறுவர்கள் அதிகளவில் உடல் ரீதியாக பாதிப்படையலாம். விளையாடவிடாது அல்லது தொடர்ச்சியாக வீடுகளில் இருக்கும் போது அல்லது வெளியிடங்களுக்குச் செல்லாமல் இருக்கும் போது அவர்களது உளநலமும் பாதிக்கலாம்.

எனவே இது தொடர்பிலும் கவனம் செலுத்தல் வேண்டும். அதேபோல் உணவு பழக்கவழக்கத்தை பொறுத்த வரை பழரசங்கள் கூடுதலாக நல்லது.

குழந்தைகளுக்கு நெத்தலி, கருவாடு, பால், பெருங்காயம், இஞ்சி, மஞ்சள், மற்றும் பச்சை இலைகளிலான உணவு நல்ல உணவாக அமையும்.

அடுத்ததாக அயடின் கூடிய பழங்கள், எலுமிச்சம் பழம் மற்றும் கொய்யாப்பழம், வாழைப்பழம் போன்ற சிறந்த நோய் எதிர்பு சக்தியுள்ள உணவு வகைகளை கொடுக்க வேண்டும்.

அடுத்ததாக சிறுவர்களுக்கு போதியளவு நீர் சிறந்த ஆகாரமாக அமையும் எனவும் கூறினார்.