தீவிரமாக உள்ள நிவர் புயல் அடுத்த 12 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும் என தகவல்!!

1010

நிவர் புயல்..

தமிழகம் சென்னை வானிலை மைய அறிவித்தலின்படி நிவர் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையான காலப்பகுதியில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அடுத்த 12 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும். இதனையடுத்து வேகமாக நகரும் நிவர் புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றிரவு கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் மணித்தியாலத்துக்கு 120 – 150 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் தற்போது கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 300 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

நிவர் புயலால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர், புதுச்சேரியில் ஆகிய இடங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் தொடர்பான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய இராணுவம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

12 பேரிடர் மீட்பு குழுக்கள், 2 பொறியாளர்கள் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரி நிலவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்து வருவதாக இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.