அரை இறுதிக்குத் தகுதிபெறுவது நிச்சயம்: அஞ்சலோ மெத்தியூஸ்

482

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்குள் நுழைவதே எமது முதல் இலக்கு என இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்கான மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை குழாம் இங்கிலாந்து சென்றுள்ளது.

மெத்தியூஸ் அணித்தலைமையை ஏற்றதன் பின்னர் இலங்கை அணி களமிறங்கும் முதலாவது முக்கிய தொடர் இதுவாகும்.
இந்நிலையில் இத்தொடர் குறித்து கருத்துத் தெரிவித்த மெத்தியூஸ்,

தொடரின் அரையிறுதிக்குள் நுழைவதே எமது முதல் இலக்கு. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரை வெல்வதற்கான வாய்ப்பு இம்முறை இலங்கை அணிக்கு உள்ளது.

அனுபவ வீரர்களும் இளம் வீரர்களும் இணைந்து சிறந்த அணியாக இத் தொடரில் களமிறங்கவுள்ள நாம் ஏனைய அணிகளுக்கு சவாலாக இருப்போம்.

தொடரின் அரையிறுதியே எமது முதல் இலக்கு. குழுநிலைப்போட்டிகளில் சிறப்பான வெற்றிகளைப்பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவதையே எமது முதல் இலக்காக கொண்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.