வடக்கில் இடம்பெயர்ந்தவர்களுக்கான விசேட வாக்காளர் பதிவு இன்று முதல்..!

530

வடக்கு மற்றும் கிழக்கில் இடப்பெயர்வுக்குள்ளான மக்கள் தமது பெயர் விபரங்களை இன்று முதல் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ள முடியும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

வடக்கில் அல்லது கிழக்கில் இடம்பெயர்ந்த எந்தவொரு பிரஜைக்கும் இந்த சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் இடம்பெயர்வின் முன்னர் பதிவு செய்யப்பட்ட இடங்களிலேயே வாக்களிக்க முடியும் என கடந்த நாட்களில் அறிவிக்கப்பட்டது.

வாக்காளர்கள் தற்போது வசிக்கும் கிராம சேவகரின் உறுதிப்படுத்தப்பட்ட பத்திரத்துடன் இடம்பெயர்வுக்கு முன்னர் வசித்து வந்த பிரதேசங்களில் தமக்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

இதேவேளை வாக்காளர்கள் இரு பரதேசங்களில் பதிவுகளை மேற்கொள்வார்களாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இந்த விசேட வாக்காளர் பதிவுக்காக விண்ணப்ப படிவங்கள் மாவட்ட செயலகங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பதிவு எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இக்காலத்தில் வாக்காளர்கள் தமது பதிவுகளை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ளுமாறு தேர்தல்கள் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.