கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணப் பெண்ணை வித்தியாசமாக திருமணம் செய்த இளைஞர்!!

1020

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணப் பெண்ணை, மாப்பிள்ளை வித்தியாசமாக கரம் பிடித்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த பாட்ரிக்-ஜிம்மென்ஸ் ஜோடிக்கு கடந்த நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

அதன் படி இந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால் திருமணம் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக மணமகள் ஜிம்மென்ஸ் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, பாட்ரிக், தனது வருங்கால வாழ்க்கைத் துணைக்கு நம்பிக்கை அளித்ததுடன் திருமணத்தை நிச்சயிக்கப்பட்ட திகதியில் நடத்தியே ஆகவேண்டும் என தீர்மானமாக இருந்துள்ளார்.

ஏனெனில், திருமணம் செய்துகொள்வதற்காக இருவரும் அரசிடம் வாங்கிய திருமண பதிவுச் சான்று குறிப்பிட்ட திகதியுடன் காலவதி ஆகிவிடும் என்பதால், அவர் இந்த முடிவில் இருந்துள்ளார்.

இதனால் எப்படி திருமணம் செய்வது என்று யோசித்த, பேட்ரிக் ஜிம்மென்ஸ் தங்கியிருந்த அறையின் ஜன்னல் அருகே சென்று நீண்ட ரிப்பனைக் கொடுத்து, மணவாழ்வில் அடியெடுத்து வைப்பதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

அவர்களின் இந்த மண விழாவில் நெருங்கிய உறவினர்கள் 10 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். மற்றவர்கள் காரில் அமர்ந்திருந்தவாறே தம்பதியினரை வாழ்த்திச் சென்றுள்ளனர்.

தங்களின் திருமண புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ள மணமகள் ஜிம்மென்ஸ், இந்த நாளை எப்போதும் என்னால் மறக்க முடியாது. நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது மிகவும் வேதனையடைந்தேன்.

இருப்பினும் பாட்ரிக் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து என்னை மனைவியாக ஏற்றுக்கொண்டார். திருமணத்தை மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும் என பல்வேறு திட்டங்களை வைத்திருந்தோம். கொரோனாவால் அது நடக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாட்ரிக் கூறுகையில், கொரோனாவால் அவள் வேதனையடைந்தாள் என்பது எனக்குத் தெரியும். அதனால், ஜிம்மென்ஸை எப்படியாவது கரம்பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் என்று கூறியுள்ளார். இந்த தம்பதிக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.