வவுனியா வாரிக்குட்டியூர் கணேஸ்வரா பாடசாலையில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்!!

597

Vav

 

வவுனியா வவுனியா வாரிக்குட்டியூர் கணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களை சீரான முறையில் நியமித்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் நேற்று (3.3) இடம்பெற்றது.

இப் பாடசாலையில் பணியாற்றிய ஆசிரியர்களை மாணவர்களின் கல்வி நிலையை குழப்பும் வகையில் கல்வி திணைக்கள அதிகாரிகள் இடமாற்றம் செய்வதாக தெரிவித்தே பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாதனைகள் படைத்த கல்லூரியை சோதனைக்கு உட்படுத்தாதே, நகரவாழ்க்கையை அனுபவிக்கும் உமக்கு கிராம வாழ்க்கை பகடைக்காயா, பதவியில் இருந்துகொண்டு பாமரரை எதிர்க்காதே என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளருக்கு பாடசாலையின் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பாக எடுத்துக்கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தாம் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடடியதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களால் வழங்கப்பட்ட மனு தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி சிறந்த தீர்வை பெற்றுக்கொடுப்பதாவும் தெரிவித்தார்.

இதேவேளை செட்டிகுளம் கோட்ட கல்விப்பணிப்பாளர் எம்.பி.நடராஜா சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் ஒருமாத காலத்தினுள் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்திருந்தார்.

எனினும் அதுவரை காலமும் பொறுத்திருக்க முடியாதுள்ளதால் ஒருவாரகாலத்தில் ஆசிரியரை நியமித்து மாணவாகளின் கல்வி நடவடிக்கைகளை சீராக கொண்ட செல்ல கல்வி திணைக்களம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தாம் தமது போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் பாடசாலையின் அதிபர் உட்பட ஆசிரியர்களை பாடசாலைக்குள் நுழையவிடாது பெற்றோரும் மாணவர்களும் மேற்கொண்ட இவ் ஆர்ப்பாட்டம் காலை 8 மணியில் இருந்து மதியம் வரை இடம்பெற்றது.