வவுனியாவில் 4078 பேர் தனிமைப்படுத்தலில் : பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!!

2047

4078 பேர் தனிமைப்படுத்தலில்..

வவுனியா பட்டாணிச்சூரில் வசித்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்து குறித்த பகுதிகள் தற்காலிகமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் 938 குடும்பங்களைச் சேர்ந்த 4078 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியா பட்டாணிச்சூர் முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன்,

மற்றையவர் 6ஆம் ஒழுங்கையில் வசிக்கும் கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் என்பதுடன் அவருக்கான பரிசோதனை கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட போதே தொற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த நபர்களுடன் தொடர்புடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதோடு குறித்த நபர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பாக விசாரணைகளும் இடம்பெற்று வருகிறது.

இதேவேளை பல்வேறுபட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொலிஸார் தொற்றுக்கு இலக்கானோருடன் தொடர்புகளை மேற்கொண்ட நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கிராமங்களுக்குச் சென்று குறித்த தொற்றுக்கு இலக்கானோருடன் நேரடியாகத் தொடர்புகளை மேற்கொண்டிருந்த நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையிலும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர்.