வவுனியாவில் அரசாங்க அதிபரின் உத்தரவினை மீறி திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள்!!

3667

வர்த்தக நிலையங்கள்..

வவுனியா நகரின் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட வர்த்தக நிலையங்களை பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகும் வரை மூடுமாறு அரசாங்க அதிபர் தெரிவித்த போதிலும் அரசாங்க அதிபரின் உத்தரவினை மீறி பல வர்த்தக நிலையங்கள் நகரில் திறக்கப்பட்டுள்ளன.

வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் கடந்த புதன்கிழமை (06.01) காலை முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாற்றுபவர்கள் என 204 பேருக்கு சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பிசீஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று முன்தினம் (08.01) மதியம் வெளியாகிய நிலையில் பெண் ஒருவர் உட்பட 54 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த 54 பேரையும் கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் (08.01) இரவு தொடக்கம் மறு அறிவித்தல் வரை பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் அப் பகுதியினுள் எவரும் உள் செல்லவும் , வெளிச்செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் நேற்று (09.01) காலை 10.00 மணி தொடக்கம் ஹொரவப்பொத்தானை வீதி, மில் வீதி, முதலாம் குருக்குத்தெரு, கந்தசுவாமி கோவில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி என்பனவும் பொலிஸாரினால் முடக்கப்பட்டு அப்பகுதி வர்த்தர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் (09.01) அரசாங்க அதிபரின் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது சுகாதார திணைக்களத்தின் வேண்டுகோளிற்கு அமைவாக நகரில் முக்கிய இடங்களில் வர்த்தக நிலையங்களில்,

பணியாற்றும் ஊழியர்களின் சுகாதார தன்மையினை உறுதிப்படுத்துவதுடன் அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு பி.சி.ஆர் பெறுபேறு வரும் வரை குறித்த வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூடுவது எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் மில் வீதி, முதலாம் குருக்குத்தெரு, கந்தசுவாமி கோவில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி ஆகிய பகுதிகளில் பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக நிலையங்கள் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகாத நிலையில் அரசாங்க அதிபரின் உத்தரவினை மீறி இன்று (10.01) வழமை போன்று திறக்கப்பட்டுள்ளன.

வர்த்தகர்களின் அசமந்த போக்கான நிலையினால் அவர்களின் பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகின்ற சமயத்தில் கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் வியாபார நிலையங்களுக்கு சென்று வந்த மக்களின் நிலமை கேள்விக்குறியே. எனவே இவ்வாறு அசமந்த போக்காக செயற்படும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?