வவுனியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1100 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு!!

3997

பி.சீ.ஆர் பரிசோதனை..

பட்டாணிச்சூர் பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து பட்டாணிச்சூர் உட்பட சில கிராமங்கள் முடக்கப்பட்டதுடன் குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடைய நகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பகுதி பகுதியாக முடிவுகள் வெளியாகிய நிலையில் வவுனியா நகரில் 103 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதன் பிரகாரம் பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி , ஹொறவப்பொத்தானை வீதி, மில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி,

முதலாம் குறுக்குத்தெரு, இரண்டாம் குறுக்குத்தெரு, பழைய பேரூந்து நிலையம் என்பன பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமையுடன் அப்பகுதி வர்த்தக நிலைய ஊழியர்கள், உரிமையாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .

அதன் படி கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் பழைய பஸ் நிலையம் ஹொரவப்பொத்தான வீதி, புகையிரத நிலைய வீதி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மையத்தில் 1100 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரத்தினுள் பட்டாணிச்சூர் பகுதியில் 13 நபர்களும் நகர வர்த்தக நிலைய பரிசோதனையில் 103 நபர்களும் வவுனியா வைத்தியசாலையில் 7 நபர்களும் புளியங்குளத்தில் ஒருவர் என 124 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.