வர்த்தக நிலையங்கள் திறப்பு..
வவுனியா மாவட்டத்தில் சில பகுதிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த போதிலும் இன்று (13.01.2021) தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடவடிக்கைகள் வழமை போன்று செயற்படுகின்றன.
வவுனியா நகரை அண்மித்த நெளுக்குளம், தாண்டிக்குளம், பூந்தோட்டம், மூன்றுமுறிப்பு, மடுக்கந்தை ஆகிய பகுதிகளில் சோதனை நிலையங்களை அமைத்தும் அதற்குட்பட்ட பகுதிகளுக்குள் 24ம் திகதி வரை முடக்க நிலைமையை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
குறித்த தீர்மானம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (12.01.2021) இடம்பெற்ற அவசர கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இந் நிலையில் முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட வவுனியா குழுமாட்டு சந்தி, வேப்பங்குளம், புதிய பேரூந்து நிலையத்தினை அண்மித்த பகுதி, வைத்தியசாலை சந்தி என பல பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன்,
ஒரு சில மதுபானசாலைகள், வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் நீதிமன்றத்தின் செயற்பாடுகளும் வழமை போன்று செயற்படுவதுடன் நகரின் மக்களின் செயற்பாடு அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.
மேலும் முடக்கப்பகுதி எனும் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் எவ்வித பாதுகாப்பு பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை என்பதுடன் பாதுகாப்பு அரண்கள் எவையும் போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (12.001) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் பொலிஸ் உயர் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள்,
வர்த்தக சங்கத்தினர், முச்சக்கரவண்டி சங்கத்தினர், சுகாதார பிரிவினர், சமயத்தலைவர்கள், கல்வி திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு நேற்று (12.01) மாலை பொலிஸார் மூலம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தமையுடன் மக்களையும் வீடுகளுக்கு செல்லுமாறு பொலிஸார் பணித்திருந்தனர்.
இந்நிலையில் இன்றையதினம் (13.01) குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படாது வவுனியா மாவட்டம் வழமை போன்று செயற்படுகின்றன.
சரியான தீர்மானத்தை அமுல்படுத்தாத இவ்வாறான அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் வவுனியாவில் கொரோனா வைரஸின் பரவல் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.