வவுனியாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

2917

கொரோனா..

யாழ். கொரோனா ஆய்வு கூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வவுனியாவைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூட பரிசோதனையில் மன்னார் நானாட்டான் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக இன்று பிற்பகல் தெரிவித்திருந்த நிலையில்,

இன்றைய வட மாகாண தொற்று நிலவரம் தொடர்பில் தகவல் கேட்டதற்கிணங்க, வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அருவிக்கு இத்தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வவுனியாவைச் சேர்ந்த ஐவருக்கும், பருத்தித்துறையில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் வவுனியாவில் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த 14 நாட்களாக முடக்கப்பட்டிருந்த வவுனியா பட்டாணிச்சூர் கிராமம் இன்று காலை (18.01.2021) முதல் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா நகரின் 7 வீதிகளை தவிர அனைத்து பகுதிகளும் வழமைக்கு திரும்பியன.