வவுனியாவில் முடக்கப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

3890

அறிவிப்பு..

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா சுகாதாரப் பிரிவினர் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றுபவர்கள் உடனடியாக பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறும்,

அவ்வாறு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளாத வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது என வவுனியா சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இதுவரை முடக்கப்பட்ட பகுதிகளில் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளாத வர்த்தக நிலையங்களின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் நாளையதினம் (23.01.2021) காலை வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்திற்கு சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும்,

மேலும் வவுனியாவில் முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நகர வர்த்தக நிலையங்களில் உள்ள உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின்னரே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.

பீ.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பிராந்திய சுகாதார பணிமனையினால் வழங்கப்படும் பரிசோதனை அட்டையை வைத்திருக்கும் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மட்டுமே வர்த்தக நிலையங்களில் பணிபுரிவதற்கு அனுமதிக்கப்படுவதுடன்,

குறித்த செயற்பாடுகளை மீறி செயற்படும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த மூன்று வார காலப்பகுதிக்குள் 272 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.