அரசியலே வேண்டாம் : ரஜினி பேட்டி!!

356

Rajaniகோச்சடையான் ஓடியோ வெளியீட்டு விழாவின் போது நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அரசியலே வேண்டாம் என்று ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தொடர் விவாதமாகவே இருக்கிறது.

ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது அவரது ரசிகர்களில் ஒரு பிரிவினரின் விருப்பமாக இருக்கிறது. சமீபத்தில் அவர்கள் ரஜினி அரசியலுக்கு வரவேண்டி வேள்வி யாகம் நடத்தினார்கள். சென்னையில் ரகசிய கூட்டம் நடத்தியும் பேசினர்.

அரசியலுக்கு வரும்படி வேண்டி ரஜினிக்கு எல்லோரும் கையெழுத்திட்ட கடிதங்களை கொடுப்பது என்றும் முடிவு செய்தனர்.

ஆனால் ரஜினி அரசியல் பற்றி இதுவரை எதுவும் பேசாமல் இருந்தார். பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா முடிந்த பிறகு ரஜினி தனது அரசியல் முடிவு பற்றி அறிவிப்பு வெளியிட்டார்.

பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு பாரதீய ஜனதாவுக்கா, ஆம் ஆத்மி கட்சிக்கா என்று நிரூபர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த அவர் அரசியலே வேண்டாம் என்று பதில் கூறினார்.

இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவரது மகள் ஐஸ்வர்யா பதில் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், எனது தந்தை ரஜினிக்கு அரசியல் வேண்டாம் என்று நினைக்கிறேன். அவர் அமைதியாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருக்கிறது என்றும் ரஜினி கிங்காக இருக்க வேண்டாம். கிங்மேக்கராக இருந்தால் போதுமானது எனவும் கூறியுள்ளார்.