கொழும்பு நகரில் கொண்டுவரப்படவுள்ள பாரிய மாற்றங்கள்!!

1047

கொழும்பு..

இலங்கையின் வர்த்தக நகரமான கொழும்பு நகரில் பாரிய மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சை வேறு இடம் ஒன்றுக்கு மாற்றுதல், பொலிஸ் தலைமையகத்தை வேறு இடம் ஒன்றுக்கு மாற்றுதல் உட்பட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கொழும்பு கோட்டை பிரதேசத்தின் வரலாற்று சிறப்பை மீண்டும் கொண்டு வரும் முகமாக வரலாற்று கட்டடங்களை மீள காட்சிப்படுத்தி சுற்றுலா மையமாக அதனை மாற்றுவதே இதன் நோக்கம் என்று அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் கொழும்பு போட் சிட்டி புதிய நகரமாகவும், 150 வருட பழைமையைக் கொண்ட கோட்டை பழைய வரலாற்று நகரமாகவும் மாற்றப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றத்துக்கு அமைய வெளிநாட்டு அமைச்சு கொழும்பு 7 பௌத்தாலோக மாவத்தையில் உள்ள கைத்தொழில் தொழிநுட்ப நிறுவக கட்டிடத்துக்கு மாற்றப்படவுள்ளது.

பொலிஸ் தலைமையகம் ரத்மலானை அத்திட்டிய என்ற இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.ஏற்கனவே 2010ம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் கோட்டை பிரதேசம் வரலாற்று சிறப்பு மிக்க பிரதேசமாக மாற்றப்படும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டகதாவும் நிமல் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஒரு கட்டமாக கபூர் கட்டிடம் 3 பில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டது. 183 வருட பழைமையைக் கொண்ட பாழடைந்த பழைய கிரான்ட் ஒரியன்ட் ஹோட்டல் 250 மில்லியன் ரூபா செலவில் செப்பனிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் லேக் ஹவுஸ் முதல் மருதானை காமினி ஹோல் கோட்டை டிஆர் விஜயவர்த்தன வீதி சுற்றுலா பிரதேசமாக மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் நிமல் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-