வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கல் விழா தொடர்பில் வைத்தியர் அதிகாரி விடுத்துள்ள செய்தி!!

1510

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடாத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பு மற்றும் ஒருமைப்பாடு மிக அவசியம் என மாவட்ட தொற்று நோயியில் வைத்திய அதிகாரி வைத்தியர் வி.விஜிதரன் தெரிவித்துள்ளார்.

ஆலய பொங்கல் விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்தத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஆலய பொங்கல் விழாவின் போது முகக்கவசம் அணிதல், கை கழுவுதல், தொற்று நீக்கம் செய்தல் மற்றும் சமூக இடைவெளிகளை பேணுதல் ஆகியன அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆலய உள் மற்றும் வெளி வீதிகளின் அளவினைக் கொண்டு அவை குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். ஆலயத்தினுள் பிரவேசிப்பவர்கள் தொடர்பில் அவர்களுடைய பெயர், தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியன பதிவு செய்யப்பட வேண்டும்.

குடும்பமாக வரும் அடியவர்கள் வீட்டிலிருந்த படி இவற்றை தாளில் கொண்டு வருதல் பதிவு செய்பவர்களுடைய கடமையை இலகுபடுத்துவதுடன் அவ்விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பிற்பாடு உள் அனுமதிக்கப்படுவார்கள். ஆலயத்திற்கு உள்வரும் பாதை மற்றும் வெளியேறும் பாதை தனித்தனியாக அமைக்கப்பட வேண்டும்.

இது கடுமையாக கண்காணிக்கப்படும். காவடி எடுத்தல் முதலான நேர்த்திக் கடன்கள் தற்போதைய நிலையில் தடை செய்யப்பட்டுள்ளது. அடியவர்கள் ஆலய வழிபாட்டிற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு தேவையற்ற விதத்தில் ஒன்று கூடுதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

கடைகளில் மக்கள் ஒன்று கூடும் சந்தர்ப்பங்களிருப்பதனால் கடைகள் பிரதான வீதிவரை தற்போதைய நிலையில் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசியமானதெனின் மூன்று தினங்களிற்றுள் பி.சி.ஆர் செய்து கொண்டவர்கள் மட்டும் அனுதிக்கப்படுவார்கள்.

அன்னதானங்கள் முதலியன சுகாதார முறைப்படி பொதி செய்யப்பட்டு மக்கள் ஒன்றுகூடாத வகையில் வழங்கப்பட வேண்டும். ஆலய சூழலில் கடைமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் தொடர்பில் சுகாதார துறையினருடன் தொடர்புகளை பேணுதல் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளல் முக்கியமானதென தெரிவித்துள்ளார்.